தருமபுரி – மார்ச் 26:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அக்குமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர். முன்தினம் கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்தும், அம்மன் வேடம் அணிந்தும் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர்.
விழா நாளன்று அதிகாலை கோமாதா பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகாசாந்தி ஹோமம் மற்றும் வேதபாராயணம் நடைபெற்றது. பின்னர் பூர்ணாஹூதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித கலச தீர்த்தக் குடங்களை முக்கியஸ்தர்கள் தலைமேல் சுமந்து கொண்டு வந்து, கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அந்த தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அக்குமாரியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து, பூக்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், 12 கிராம மக்களும், ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள் மற்றும் விழாக்குழுவினரும் சிறப்பாக செய்திருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)


