தருமபுரி - மார்ச். 16:
தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பில் “வாழ்க்கையும் இலக்கியமும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் திருநெல்வேலி ராணி அண்ணா மகளிர் கல்லூரி ஆங்கிலத் துறை இணை பேராசிரியர் முனைவர் சண்முக சுந்தரராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், வாழ்க்கையும் இலக்கியமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும், அதிகமான புத்தகங்களைப் படிப்பதன் மூலம் இலக்கியத்தின் வழியாக வாழ்க்கையை ஆழமாக உணர முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் இலக்கியத்துடன் இணைந்து வாழ்ந்த பலரின் வாழ்க்கை முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் மா. செல்வபாண்டியன் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து ஆங்கிலத் துறைத் தலைவரும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கோவிந்தராஜ் பல்வேறு இலக்கிய படைப்புகளை எடுத்துக்காட்டாக கூறி, வாழ்க்கையும் இலக்கியமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை என தனது துவக்க உரையில் எடுத்துரைத்தார்.
ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் வரவேற்பு உரையை இரண்டாம் ஆண்டு மாணவி பியூலா நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினரை செல்வி ஸ்ரீதா அறிமுகப்படுத்தினார். இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி நர்மதா வாணி நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியை முதலாம் ஆண்டு மாணவி கிருத்திகா தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் சரண்யா மற்றும் மீனா மேற்கொண்டனர். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு கருத்தரங்கில் பயனடைந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)