தருமபுரி – மார்ச் 26:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026 ஐ முன்னிட்டு, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் “தேர்தல் திருவிழா – என் வாக்கு என் உரிமை” என்ற விழிப்புணர்வு பேரணி இன்று (26.03.2026) நடைபெற்றது.
இந்த பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ செவிலியர்கள் கலந்து கொண்டு, வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கி, வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் செவிலியர்கள் ரங்கோலி கோலங்கள் வரைந்து “என் வாக்கு என் உரிமை” என்ற வாசகங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதேபோல், தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், “என் வாக்கு என் உரிமை” என்ற ஸ்டிக்கர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மருத்துவமனை வளாகத்தில் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டன. மேலும், ரோபோ மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, புதுமையான முயற்சிகளை பாராட்டினார்.
இந்நிகழ்வில் இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு. சாந்தி, தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. கோ. கோபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)