இண்டூர் - மார்ச். 19:
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே கல்குவாரி அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக எச்சரித்து போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இண்டூர் அருகிலுள்ள நாகர்கூடல் பஞ்சாயத்துக்குட்பட்ட கும்பளப்பாடி மற்றும் கரடிகால் குண்டு கிராமங்களில், விவசாய பட்டா நிலங்களை ஒட்டிய பகுதியில் தனியார் ஒருவர் கல்குவாரி அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கும்பளப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இண்டூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்குவாரி தரப்பினரும் போலீஸ் நிலையத்திற்கு வந்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இண்டூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் எஸ்.ஐ. வெங்கடேஷ்குமார் ஆகியோர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சில நேரம் பரபரப்பு நிலவியது. மேலும், இந்த கல்குவாரி அமைக்கும் பணியை எதிர்த்து, கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி கிராம மக்கள் பொக்லைன் இயந்திரங்களை தடுத்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
கல்குவாரி அமைக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)