தருமபுரி - மார்ச் 13:
தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் 15.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 33 திட்டப்பணிகளை திறந்து வைத்து, மேலும் 33.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 421 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல் 28,639 பயனாளிகளுக்கு ரூ.254.59 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நலத்திட்ட உதவிகளில்,
-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 4,195 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்ட வீடு கட்டும் ஆணைகள்
-
வருவாய்த் துறையின் சார்பில் 1,328 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்
-
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 69 பேருக்கு நிவாரண உதவித் தொகை
-
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் தையல் இயந்திரங்கள் மற்றும் தேய்ப்பு பெட்டிகள்
-
கூட்டுறவுத் துறையின் சார்பில் 630 பேருக்கு கால்நடை பராமரிப்பு கடன் மற்றும் பயிர் கடன்
-
மகளிர் திட்டத்தின் சார்பில் 9,297 மகளிருக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டன.
மேலும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 20 விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு மற்றும் சூரிய சக்தி மின் மோட்டார் அமைக்கும் உதவிகள், வனத்துறையின் மூலம் 24 பேருக்கு சுழல் நிதி கடனுதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 40 பேருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 200 மீனவர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 706 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 500 தொழிலாளர்களுக்கு புதிய பதிவு அட்டைகள் வழங்கப்பட்டன.
பால்வளத்துறையின் சார்பில் 11,187 பேருக்கு கூடுதல் ஊக்கத் தொகை காசோலைகள், சமூக நலத்துறையின் சார்பில் 75 பெண்குழந்தைகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட வைப்புத் தொகை ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ. ரூபன் சங்கர் ராஜ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)