பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.23:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கலசப்பாடியில் வாச்சாத்தி முதல் கலசப்பாடி வரை ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட 5.2 கிலோமீட்டர் தார்சாலை மற்றும் உயர்மட்ட பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 21.02.2026 அன்று திறந்து வைக்கப்பட்டது. மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திட்டத்தைத் திறந்து வைத்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கலசப்பாடி, அரசநத்தம், கோட்டக்காடு, புளியமரத்துவளவு, கினத்துவளவு, ஆலமரத்துவளவு, தரிசுக்காடு, கருக்கம்பட்டி, சோளக்காட்டுமதுவு, நைனாவளவு, அக்கரைக்காடு உள்ளிட்ட மலைக் கிராமங்கள் இந்தச் சாலை மற்றும் பாலத் திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் தார்சாலை, மருத்துவ சேவை, உயர்கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் 5.2 கி.மீ தூரத்தில் தார்சாலை அமைக்கப்பட்டதுடன், சித்தேரி ஊராட்சியில் நலுங்குப்பாறை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் மலைப்பகுதி கிராமங்களுக்கு ஆண்டு முழுவதும் பாதுகாப்பான போக்குவரத்து வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, அரூர் நகராட்சி துணைத்தலைவர் திரு தனபால், வருவாய் கோட்டாட்சியர் திரு செம்மலை, அரூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ஹேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, வேடம்மாள், மனோகரன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)