தருமபுரி | பிப்ரவரி 09
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி அருகேயுள்ள டேம் ரோடு பகுதியில் இன்று மாலை பட்டாசு குடோன் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில், அதில் பணியாற்றி வந்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பாப்பாரப்பட்டி அருகே பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள சி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக் (த/பெ சக்திவேல்) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை எதிர்பாராத விதமாக குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில், குடோனுக்குள் வேலை செய்து கொண்டிருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த மாசி என்பவர் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடி வந்து, படுகாயமடைந்த மாசியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து எஸ்.பி. மகேஸ்வரன், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
.gif)

