பாலக்கோடு, ஏப்ரல். 15:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க வேட்பாளர் கே.பி. அன்பழகனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வந்தால் மாநிலத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறாது” எனக் கூறினார். மேலும், தருமபுரி மாவட்டத்தின் முக்கிய பிரச்சினையாக தண்ணீர் பற்றாக்குறையை சுட்டிக்காட்டிய அவர், பாலக்கோடு தொகுதியில் அறிவிக்கப்பட்ட என்னேகொள்புதூர் நீர்திட்டம் மற்றும் காவிரி உபரி நீர் திட்டம் திமுக ஆட்சியால் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது என்றும், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி — பாமக, பாஜக, தமாக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், “தற்போதைய ஆட்சியில் தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைகள் நடைபெறுகின்றன” என்று கூறி, கடந்த கால ஆட்சிகளுடன் ஒப்பிட்டு கடும் விமர்சனம் செய்தார்.
மேலும், தேர்தல் காலத்தில் பணம் மற்றும் கூப்பன் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், வாக்காளர்கள் அதை ஏற்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அமைந்தால், நீர்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)