பாலக்கோடு, பிப்.20:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரமாசியின் மகன் கண்ணப்பன் (20), வெள்ளிச்சந்தையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல், ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 10ஆம் தேதி உடல்நிலை சரியில்லையென பாலக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற அவர், அன்றிரவு வீட்டில் இருந்தபோது களைக்கொல்லி விஷத்தை அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (20ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல:
மன அழுத்தம், குடும்பப் பிரச்சினைகள், வேலை தொடர்பான அழுத்தம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர். மனஉளைச்சல் ஏற்பட்டால் உடனடியாக குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நிபுணர்களுடன் பகிர்ந்து ஆலோசனை பெறுவது அவசியம்.
தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை, மனநல ஆலோசகர் அல்லது காவல்துறையை அணுகலாம். தேசிய அளவிலான மனநல உதவி எண் KIRAN (1800-599-0019) மூலம் 24 மணி நேரமும் இலவச ஆலோசனை பெறலாம்.
வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் நிரந்தரமல்ல; உதவி கேட்பது பலவீனம் அல்ல, அது ஒரு துணிச்சலான முடிவு என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
.gif)

.jpg)