பாலக்கோடு, பிப். 20:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட நிதி மற்றும் மருத்துவர்களின் கார்பஸ் நிதியிலிருந்து உருவாக்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு தொடக்க விழாவும், திருவள்ளுவர் திருஉருவ சிலை திறப்பு விழாவும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் புதிய யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவினை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்ததுடன், தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருஉருவ சிலையையும் திறந்து வைத்தார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மற்றும் மருத்துவர் சாந்தி முன்னிலை வகித்தார்.
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் புறநோயாளர் பிரிவில் சுமார் 700 முதல் 800 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகளாக தினமும் 80 முதல் 90 பேர் வரை தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை அலோபதி மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், மருந்துகள் மட்டுமல்லாமல் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறையில் சிகிச்சை அளிக்கும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
மனித வாழ்வின் ஒழுக்க நெறிகளை 1330 குறள்களாக தொகுத்து வழங்கிய திருவள்ளுவரின் திருஉருவ சிலை திறக்கப்பட்டதன் மூலம் மருத்துவமனை வளாகத்திற்கு புதிய சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் ஈஸ்வரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வினோத்குமார், மருத்துவர்கள் சசிரேகா, செந்தில்குமார், சிலம்பரசன், நவீன், மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகன், கண்காணிப்பாளர் சாந்தி, செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)