தருமபுரி | பிப்ரவரி 10 :
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், ‘என் ஊர் என் கனவு’ திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம் வளர்ச்சிப்பாதையை நோக்கி என்ற தலைப்பில் இலக்கு–2030 (உத்திகள் மற்றும் செயல் திட்டம்) தொடர்பான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டத்தை, மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.02.2026) துவக்கி வைத்து கலந்துரையாடினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயங்களும் வழங்கப்பட்டன. இந்தக் கூட்டத்திற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி முன்னிலை வகித்தார்.
கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக உயர்த்தி வருவதாக தெரிவித்தார்.
‘என் ஊர் என் கனவு (My Town My Dream)’ திட்டம், 2030-க்குள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊர், மாவட்டங்களையும் இலக்காகக் கொண்டு வளர்ச்சிக்கான தொலைநோக்கு அறிக்கை (Vision Document) தயாரிக்கும் அரசின் முக்கிய முன்முயற்சி எனவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் மூலம் மாவட்ட வளர்ச்சிக்கான அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய செயல் திட்டம் வகுக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
இந்த திட்டம் ஊர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பள்ளிகள், மருத்துவமனைகள், நூலகங்கள், பொது இடங்கள் மேம்பாடு ஆகியவற்றிற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க வழிவகுக்கும் என்றும் விளக்கினார். மேலும், கிராமப்புறங்களில் தார் சாலைகள், தெருவிளக்குகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், குளம்–ஏரி தூர்வாருதல் போன்ற சுற்றுச்சூழல் பணிகளும் இந்தத் திட்டத்தின் முக்கிய கூறுகளாக இருக்கும் என தெரிவித்தார்.
கலந்தாய்வில் பங்கேற்ற அனைவரும் இங்கு முன்வைக்கப்பட்ட பயனுள்ள கருத்துகளை எடுத்துக்கொண்டு பயன்படுத்தி, தங்களுடைய பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக வழங்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட “தருமபுரி மாவட்டம் வளர்ச்சிப்பாதையை நோக்கி” என்ற குறும்படம் திரையிடப்பட்டு, பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா, முன்னாள் மாவட்ட ஆட்சியர் (பணி ஓய்வு) திரு அண்ணாமலை, திரைப்பட நடிகர் பென்ஜமின், பாடகர் மூக்குத்தி முருகன், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி செளமியா குமார், மாநில விவசாய சங்க தலைவர் திரு சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், சங்க பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவனங்கள், துறைசார் வல்லுநர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662