தருமபுரி | பிப்ரவரி 10:
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினம் முன்னிட்டு, பள்ளி மாணவ–மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.02.2026) தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கி பார்வையிட்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 3.94 இலட்சம் குழந்தைகளுக்கும், மேலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1.00 இலட்சம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட உள்ளது என்றார்.
குடற்புழு நீக்க மாத்திரைகள், குழந்தைகள் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு உறிஞ்சப்பட உதவுவதோடு, குடலில் உள்ள புழுக்களை அழித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குறிப்பாக,
-
இரத்தசோகை தடுப்பு
-
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
-
சுறுசுறுப்புத் தன்மை
-
அறிவுத்திறன் மேம்பாடு
-
உடல் வளர்ச்சி மேம்பாடு
போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என மாவட்ட ஆட்சியர் விளக்கினார்.
1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் (ITI, பாலிடெக்னிக்) உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
தேசிய குடற்புழு நீக்க தினத்தில் தகுதியுள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்கள் அல்பெண்டசோல் மாத்திரையை உட்கொள்ள ஊக்குவிக்கவும், அதன் பயன்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி திட்டம் சிறப்பாக செயல்பட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இந்த முகாமில் துணை இயக்குநர் சுகாதாரம் மரு. இராஜேந்திரன், நகர் நல அலுவலர் இலட்ஷியவர்ணா, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பள்ளி மாணவ–மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)