பசுமைத் தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில், “சிங்கப் பெண்ணே எழுந்து வா” என்ற தலைப்பில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.
தருமபுரி மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயண அனுபவங்களை நினைவு கூர்ந்த அவர், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டம் அன்புமணிக்கு வெற்றியை வழங்கிய மாவட்டம் எனக் குறிப்பிட்டார். தருமபுரி மாவட்டத்தில் சுமார் நாலரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளதாகவும், அவற்றில் பெரும்பகுதி இன்னும் மழை சார்ந்த விவசாய நிலங்களாக இருப்பதாகவும் தெரிவித்தார். விவசாயம் செழிக்க காவிரி உபநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்கான ரூ.650 கோடி நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு மறுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தருமபுரி மாவட்டத்திற்கு பெற்றுத் தந்தது பாமக என்பதை நினைவூட்டிய அவர், மாவட்டத்தில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் தொழிற்சாலைகள் வரவில்லை என விமர்சித்தார். மற்ற மாவட்டங்கள் சுமார் 20% வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் 8% வளர்ச்சியில் மட்டுமே இருப்பது வருத்தமளிப்பதாகக் கூறினார்.
108 ஆம்புலன்ஸ் சேவை, தருமபுரி மருத்துவக் கல்லூரி, மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் அன்புமணி ராமதாஸ் என சௌமியா அன்புமணி தெரிவித்தார். தமிழகத்தில் கஞ்சா மற்றும் மது புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணியின் பின்னால் திரள வேண்டும்” எனக் கூறி தனது உரையை அவர் நிறைவு செய்தார்.
.gif)

