தருமபுரி, பிப் 18:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, சேலம் மண்டலத்தின் சார்பாக, தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு பரவாசுதேவ சுவாமி திருக்கோயில் வளாகத்தில் 17.02.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழிசை விழா–2025 சிறப்பாக நடைபெற்றது.
கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் தமிழிசை மூவராகப் போற்றப்படும் முத்துதாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயர் ஆகியோரின் கீர்த்தனைகள் மற்றும் இசைப்பாடல்களின் மூலம் தமிழிசை தனித்துவப் பெருமையை பெற்றது. இந்த தொன்மையான இசைப் பாரம்பரியத்தை உலகளவில் பரப்பவும், வளர்க்கவும் 38 மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்த தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, கலை பண்பாட்டுத்துறையின் சேலம் மண்டலத்தின் முன்னெடுப்பில் தருமபுரி மாவட்டத்தில் இவ்விழா நடத்தப்பட்டது.
இவ்விழா காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற்றது.
-
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலைஞர்களின் தவில், நாதசுரம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
-
மாலை 4.00 மணிக்கு “கலைமாமணி” திரு. கே.என். கோதண்டராமன் அவர்களின் நாதசுரக் கச்சேரி நடைபெற்றது.
-
அதனைத் தொடர்ந்து “கலைமாமணி” திரு. ஏ.ஜி. கோவிந்தராசு கலைக்குழுவினரின் சாக்ஸஃபோன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
-
செல்வி சாக்ஷி அசோக் கலைக்குழுவினரின் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
-
தமிழக அரசவைக் கவிஞர், “கலைமாமணி” திருப்பாம்புரம் சகோதரர்கள் திரு. டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம் மற்றும் திரு. டி.எஸ்.என். சேஷகோபாலன் ஆகியோரின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
-
இக்குழுவில் “கலைமாமணி” கோவிலூர் திரு. கே.ஜி. கல்யாணசுந்தரம் மற்றும் “கலைமாமணி” சேந்தமங்கலம் திரு. ஆ. மணிகண்டன் ஆகியோர் தவில் வாசிப்பில் சிறப்பித்தனர்.
இவ்விழாவில் தருமபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு. மு. மகாவிஷ்ணு தலைமையேற்று, தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி தே. சாந்தி முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை சேலம் மண்டல உதவி இயக்குநர் திரு. சு. சங்கரராமன் மற்றும் தருமபுரி மாவட்ட சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் திரு. முத்துகிருஷ்ணன் மேற்கொண்டனர்.
தமிழிசை வளர்ச்சிக்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றும், இவ்விழா இசை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
.gif)

.jpg)