தருமபுரி | பிப்ரவரி 06:
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி வின்சென்ட் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று (06.02.2026) நடைபெற்றது.
இந்த விழாவை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசைப் பொருட்களை வழங்கினார்.
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர்,
-
கர்ப்பிணி தாய்மார்கள் உடல் மற்றும் மனநலம் பேணுதல் அவசியம்,
-
கர்ப்ப காலத்தில் அரசு மருத்துவமனைகளில் தவறாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,
-
தடுப்பூசிகள், இரும்புச் சத்து மாத்திரைகள், ஊட்டச்சத்து உணவுகளை காலத்துக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்,
-
அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்வதன் மூலம் ஊட்டச்சத்து பெட்டகம், மகப்பேறு உதவித் தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை பெறலாம்,
-
குழந்தை பிறந்த பின் கட்டாயம் தாய்ப்பால் அளிக்க வேண்டும்
என விரிவாக எடுத்துரைத்தார்.
கர்ப்ப காலம் முதல் குழந்தை பிறந்த பின் 1000 நாட்கள் வரை வழங்கப்படும் சரியான பராமரிப்பு, உணவு மற்றும் தாய்ப்பால் குழந்தையின் உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை என வலியுறுத்தப்பட்டது. இன்றைய நிகழ்ச்சியில் சுமார் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், வளையல்கள், பூ, தேங்காய், 1000 நாட்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம், அடங்கிய வளைகாப்பு சீர் வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், கர்ப்பிணிகளுக்கு ஐவகை சாதங்களுடன் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
விழாவில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவூட்டும் முறைகள், குழந்தை வளர்ச்சிப் படிநிலைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ச. பவித்ரா, தமிழ்நாடு கைம்பெண் நல வாரிய உறுப்பினர் திருமதி எம். ரேணுகாதேவி, இணை இயக்குநர் (மருத்துவம் & ஊரக நலம்) மரு. சாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. இராஜேந்திரன், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)