தருமபுரி, பிப். 20:
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முக்கியமானதாக இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில், சாதாரண இருசக்கர வாகனத்தை இயக்க இயலாத தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ், இரு கால்களும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஒரு கால் பாதிக்கப்பட்டு இரு கைகளும் நன்றாக செயல்படும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களில் உள்ள கூடுதல் சக்கரங்களை அகற்றிவிட்டு, அதை சாதாரண இருசக்கர வாகனமாக பயன்படுத்துவது தவறானது என மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாகனங்களை பிறர் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், இணைப்பு சக்கரங்களை அகற்றி தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு மற்றும் சுயநிலைத்தன்மையை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இந்த நலத்திட்ட வாகனங்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)