தருமபுரி | பிப்ரவரி 06:
தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கக் கூடாது, வேலை நாட்களையும் தினக்கூலியையும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு தருமபுரியில் திறந்தவெளி ஆயத்த மாநாடு நடைபெற்றது.
தருமபுரி தொலைபேசி நிலையம் அருகே நடைபெற்ற இந்த மாநாட்டில், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.சி.டி.யு, எல்.பி.எஃப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பங்கேற்றன. மாநாட்டில் பேசும் போது, தொழிலாளர் விரோத சட்டங்கள் காரணமாக தொழிலாளர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க பொது வேலை நிறுத்தத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிக்கவும், தினக்கூலியை உயர்த்தி வழங்கவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த ஆயத்த மாநாட்டில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு, பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த உறுதியெடுத்தனர்.
.gif)

.jpg)