தருமபுரி, ஜன. 10:
தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றியம் பெரிய குரும்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு சிலம்பம் தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டு, அதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் வளர தற்காப்புக் கலை மிகவும் அவசியம் என்ற நோக்கில், பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின் படி வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் வீதம், மூன்று மாத காலத்தில் மொத்தம் 24 வகுப்புகளாக இந்த சிலம்பம் பயிற்சி நடத்தப்பட்டது.
சிலம்பம் பயிற்சியாளர் முருகன், மாணவிகளுக்கு அடிப்படை முதல் மேம்பட்ட நிலை வரை பயிற்சிகளை வழங்கினார். இதில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சியின் நிறைவு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மாணவிகளை பாராட்டி ஊக்குவித்தனர். இத்தகைய தற்காப்பு பயிற்சிகள் மாணவிகளின் தன்னம்பிக்கையை உயர்த்துவதோடு, உடல் வலிமை மற்றும் மன உறுதியை வளர்க்க உதவுவதாகவும், எதிர்காலத்தில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் திறனை உருவாக்குவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி பெற்றோர் மற்றும் பள்ளி சமூகத்தினரிடையே பாராட்டைப் பெற்றது.

