பாலக்கோடு, ஜன.02:
தருமபுரி மாவட்டத்தில் தற்போது கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் 1057 நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 44 நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மொத்தமாக 1101 நியாயவிலைக் கடைகள் இயங்கி வரும் நிலையில், இதில் 516 முழுநேர மற்றும் 585 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அடங்கும். இக்கடைகள் மூலம் 4,75,621 குடும்ப அட்டைகள் பயனடைந்து வருகின்றன.
பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை எளிதில் பெற்றுக் கொள்ளும் நோக்குடன், செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (எஸ்.542) கட்டுப்பாட்டின் கீழ் ஜாகீர் வரகூர் மற்றும் இருளப்பட்டியில் தலா ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை, நடுஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (எஸ்.592) கட்டுப்பாட்டின் கீழ் தாசனம்பட்டியில் ஒரு பகுதி நேர கடை, கெலவள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (கே.கே.85) கட்டுப்பாட்டின் கீழ் ஜெடையன்கொட்டாயில் ஒரு பகுதி நேர கடை, கருக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (கே.கே.61) கட்டுப்பாட்டின் கீழ் சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதியில் ஒரு பகுதி நேர–முழுநேர கடை, ஆச்சாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (கே.கே.219) கட்டுப்பாட்டின் கீழ் பி.கொல்லப்பட்டியில் ஒரு முழுநேர கடை மற்றும் செட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (கே.கே.289) கட்டுப்பாட்டின் கீழ் ஜோதிஅள்ளியில் ஒரு முழுநேர நியாயவிலைக் கடை என மொத்தம் 7 புதிய கடைகள் திறக்கப்பட்டன.
இக்கடைகளின் செயல்பாட்டு நாட்களாக, ஜாகீர் வரகூர் மற்றும் இருளப்பட்டி பகுதிகளில் உள்ள பகுதி நேர நியாயவிலைக் கடைகள் சனிக்கிழமைகளில், தாசனம்பட்டியில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஜெடையன்கொட்டாயில் புதன்கிழமைகளில், சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதியில் சனிக்கிழமைகளில் செயல்படும். பி.கொல்லப்பட்டியில் அமைக்கப்பட்ட முழுநேர நியாயவிலைக் கடை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், ஜோதிஅள்ளியில் அமைக்கப்பட்ட முழுநேர நியாயவிலைக் கடை வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
2021 முதல் இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 26 முழுநேர மற்றும் 32 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 58 புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கு.த. சரவணன், பொது விநியோகத் திட்டம் துணைப் பதிவாளர் ப. சுந்தரம் உள்ளிட்ட அலுவலர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

.jpg)