தருமபுரி, ஜன. 22:
தருமபுரி மாவட்டத்தில் ஆதரவு அற்றும், ஏழ்மையில் உயிரிழப்பவர்களின் புனித உடல்களை மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் மை தருமபுரி அமைப்பினர், மேலும் ஒரு மனிதநேயச் சேவையை மேற்கொண்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காததால், அவரது புனித உடல் தருமபுரி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, மை தருமபுரி அமைப்பின் அமரர் சேவை மூலம் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நல்லடக்க நிகழ்வில், ஒகேனக்கல் காவல் நிலைய காவலர் கோவிந்தராசு, மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் சையத் ஜாபர், கிருஷ்ணன், கார்த்திகேயன், மேலும் சிவன் திருவடி சேவை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக மை தருமபுரி அமைப்பின் அமரர் சேவை மூலம் இதுவரை 190 புனித உடல்கள் தங்கள் உறவாக எண்ணி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய ஆத்மாத்ம சாந்தி பூஜை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைப்பினர் தெரிவித்தனர்.

.jpg)