மொரப்பூர், ஜன. 13:
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.01.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டு, அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த கோப்புகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, அனைத்து பதிவுகளும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை சரிபார்த்தார். மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு விரைவாகவும் காலக்கெடு தவறாமலும் தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அத்துடன், வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் அரசின் வழிகாட்டுதலின்படி சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்கி பணியாற்றவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட உள்ள சமையல் பாத்திரங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, அவற்றின் தரம், உறுதித்தன்மை மற்றும் பயன்பாட்டுத் தகுதி குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி. சத்யா, திரு. ஜெகதீசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

.jpg)