தருமபுரி, ஜன.04:
தருமபுரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.01.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மருந்தகம் உள்ளிட்ட முக்கிய சிகிச்சை பிரிவுகளுக்கு சென்று பார்வையிட்டார். நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் உள்ள கணினி மூலம் நோயாளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படும் நடைமுறைகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவு, அவசரகால சிகிச்சை பிரிவு, இயல்முறை சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் விவரமாக கேட்டறிந்தார்.
சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் உதவியாளர்கள் காத்திருக்கும் இடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் அமர்வதற்கான உரிய வசதிகளை மருத்துவமனையில் ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், மருத்துவமனை மற்றும் அதன் வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் முறைகள், மருத்துவமனையின் தூய்மை நிலை, குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இதற்காக மருத்துவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
மேலும், நாய்கடி மற்றும் பாம்பு கடி சிகிச்சைக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதா என்பதையும் செவிலியர்களிடம் கேட்டறிந்து, அவற்றின் இருப்பு நிலை குறித்து உறுதி செய்தார். இந்த ஆய்வின் போது மருத்துவர்கள், நகர நல அலுவலர் இலட்சியவர்ணன், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.
.gif)

.jpg)