தருமபுரி, ஜன.25:
ரத சப்தமியை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சாமி கோவில்லில் ரத சப்தமி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து ரத சப்தமி ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இதேபோன்று, தருமபுரி அருகே அதகபாடியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண சாமி கோவில்லில் ரத சப்தமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் மூலவர் லட்சுமி நாராயண சாமிக்கு பழங்கள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் பாராயணம், உபகார பூஜைகள், அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, சூரிய பிரபை வாகனத்தில் சீனிவாச பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலிலிருந்து எழுந்தருளி, கோபுரம் முன்பாக சூரிய உதயத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்விலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரத சப்தமி வழிபாட்டில் பங்கேற்றனர். ரத சப்தமி திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாடுகள், தருமபுரி பகுதிகளில் ஆன்மீக சூழலை உருவாக்கியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
.gif)

.jpg)