.jpg)
தருமபுரி – ஜனவரி 16:
தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஊர் பொதுமக்கள் சார்பில் கால்நடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இவ்விழாவில் காளை மாடுகள், பசுமாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகளுக்கு பாரம்பரிய முறையில் வர்ணங்கள் பூசப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கால்நடைகளுக்கு பொங்கல் படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. விவசாயத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த மாட்டுப் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. கோவிந்தசாமி கலந்து கொண்டு, ஊர் பொதுமக்களுடன் இணைந்து கால்நடைகளுக்கு பூஜை செய்து விழாவை சிறப்பித்தார். மேலும், விவசாயம் மற்றும் கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசினார்.
மாட்டுப் பொங்கல் விழாவில் இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, பாரம்பரிய உற்சாகத்துடன் விழாவைக் கொண்டாடினர்.
