தருமபுரி, ஜன. 23:
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் மற்றும் மகளிர் சதுரங்கப் போட்டிகள், சேலம் வைசியா கல்லூரியில் 21.01.2026 மற்றும் 22.01.2026 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 6 சதுரங்க வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தனிநபர் சதுரங்கப் போட்டிகளின் மகளிர் பிரிவில், கணிதவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி K.C. கவியரசி மூன்றாம் இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தார்.
குழு முதன்மையாளர் (டீம் சாம்பியன்ஷிப்) போட்டிகளில், தருமபுரி அரசு கலைக்கல்லூரி மகளிர் சதுரங்க அணியைச் சேர்ந்த K.C. கவியரசி (கணிதவியல், II ஆண்டு), G. சுமிதா (கணிதவியல், III ஆண்டு), G. சிவகாமி (வேதியியல், III ஆண்டு) ஆகியோர் சிறப்பாக விளையாடி மகளிர் குழு முதன்மையாளர் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றனர்.
ஆடவர் பிரிவில், J.R. சத்யன் (இயற்பியல், III ஆண்டு), M. விஜய் பிரித்தன் (முதுகலை ஆங்கிலம், II ஆண்டு), P. அருண் ராஜ் (கணிதவியல், I ஆண்டு) ஆகியோர் இணைந்து விளையாடி, ஆடவர் குழு முதன்மையாளர் போட்டிகளில் மூன்றாம் இடம் பெற்றனர்.
இந்த சாதனையைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் கோ. கண்ணன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தகுதி சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

.jpg)