தருமபுரி, ஜன.05:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று (05.01.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 476 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா வழங்கல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை மற்றும் பிற நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. இதனுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகைகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பான மனுக்களும் பெறப்பட்டன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர், பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களில் காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த 3 கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) திரு சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு ஜெ. ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட இயக்குநர் திருமதி அ. லலிதா, மாவட்ட வன அலுவலர் திரு கா. இராஜாங்கம் (இ.வ.ப.), தருமபுரி மற்றும் அரூர் வருவாய் கோட்டாட்சியர்கள், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு சுப்பிரமணியன், தனி வட்டாட்சியர் ராஜராஜன் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)