தொப்பூர், டிச16:
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தருமபுரி–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் நோக்கி சென்ற லாரி ஒன்று, முன்னால் சென்ற இருசக்கர வாகனம், ஆம்னி வேன் மற்றும் காரின் மீது அடுத்தடுத்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் தம்மணம்பட்டியை சேர்ந்த அருணகிரி, மாதேமங்கலத்தை சேர்ந்த கலையரசி, சங்கரியை சேர்ந்த முனியப்பன், தினேஷ் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 4 பேரை மீட்ட காவல்துறையினர், அவர்களை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சதீஷ் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கோவை ஐ.ஜி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மாதேஸ்வரன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீதரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. ஜெயதேவ்ராஜ், இந்திய தேசிய நெடுஞ்சாலை குழு தலைவர் திரு. ரவி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக தொப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.jpg)