பென்னாகரம், டிச.24:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமின் ஒரு பகுதியாக, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவுக் கலப்படம் குறித்த விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள், மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார், எம்.பி.,பி.எஸ். அவர்களின் மேற்பார்வையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்களால் நடத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு தொடர்பான அரங்கில், பொதுமக்கள் உணவுப் பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது..jpg)
குறிப்பாக, பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு நிறுவனத்தின் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், எடை அல்லது எண்ணிக்கை, உட்காரணி பட்டியல், ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் மற்றும் அலர்ஜி தொடர்பான எச்சரிக்கைகள் ஆகியவற்றை அவசியம் சரிபார்க்க வேண்டும் என விளக்கப்பட்டது. இதுதொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த கண்காட்சி அரங்கை, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே. மணி அவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் திரு. கார்த்திகேயன், திரு. பாபு, பேராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பார்வையிட்டார். அப்போது, உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், வீட்டிலேயே எளிதாக உணவுக் கலப்படம் கண்டறியும் முறைகள் குறித்து நேரடியாக செயல் விளக்கம் அளித்தார்.
தேயிலை, தேன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு, நெய், சமையல் எண்ணெய், பால், வெல்லம், பச்சை பட்டாணி, சாயம் ஏற்றப்பட்ட பச்சை பட்டாணி, செர்ரி பழம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறியும் வழிமுறைகள் விளக்கப்பட்டன. அதேபோல், அயோடின் உள்ள உப்பு மற்றும் அயோடின் இல்லாத உப்பின் வேறுபாடு, அயோடின் உப்பின் அவசியம், மேலும் சைவ – அசைவ உணவுப் பொருட்களின் அடையாளங்கள் குறித்தும் உணவுப் பொருட்களை கொண்டு நேரடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த அரங்கை பென்னாகரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. இன்பசேகரன் அவர்களும் பார்வையிட்டார்.
உயர் அலுவலர்கள், மருத்துவத் துறையினர், காவல் துறையினர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் முன்னிலையில், தரமான உணவுப் பொருட்கள், தரமற்ற உணவுப் பொருட்கள், கலப்படம் செய்யப்பட்டவை மற்றும் கலப்படம் இல்லாத உணவுப் பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு அரங்கை பொதுமக்கள் திரளாக பார்வையிட்டு, ஆர்வத்துடன் விளக்கங்களை கேட்டறிந்தனர். உணவுக் கலப்படத்தைத் தடுப்பதில் பொதுமக்களின் பங்கு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.

.jpg)
.jpg)