நல்லம்பள்ளி, டிச. 24:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, NH-44 சேலம்–தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாளையம்புதூர் X சாலை சந்திப்பில் தொடர்ந்து நடைபெறும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் (Underpass) அமைக்க வேண்டும் என, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மனுக்கள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.
இதுதொடர்பாக வழக்கறிஞர் மதேஷ்குமார் என்பவர், மத்திய அரசின் CPGRAMS (Public Grievance Portal) வாயிலாக முதன்முதலில் 09.01.2024 அன்று புகார் அளித்தார். அந்த மனுவில், பள்ளி, மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ள இந்த சந்திப்பில், பொதுமக்கள் சாலையை கடக்க முடியாத நிலை உள்ளதாகவும், அடிக்கடி உயிரிழப்புகள் மற்றும் விபத்துகள் நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த NHAI – PIU, சேலம், பாளையம்புதூர் சந்திப்பில் மேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு ஆய்வில் உள்ளதாகவும், செலவுத்திட்ட மதிப்பீடு தயாரிப்பு நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தது
இந்த பதிலுக்குப் பின்னரும் எந்தப் பணியும் தொடங்கப்படாத நிலையில், 14.06.2024 அன்று மீண்டும் CPGRAMS மூலம் மனு அளிக்கப்பட்டது. அதில், NH-44 காஷ்மீர்–கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையின் முக்கியப் பகுதியான இந்தச் சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிப்பதால், பாளையம்புதூர் சந்திப்பு மிகுந்த ஆபத்தான இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு NHAI அளித்த பதிலில், Km 151/837 பகுதியில் Light Vehicular Underpass (LVUP) அமைப்பதற்கான செலவுத்திட்ட மதிப்பீடு, தகுந்த அதிகார அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டது
இதனையடுத்து, 21.02.2025 அன்று மூன்றாவது முறையாக அளிக்கப்பட்ட மனுவில், மேம்பாலம் அமைப்பது தாமதமானால் மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த NHAI, பாளையம்புதூர் சந்திப்பு கிருஷ்ணகிரி–சேலம் NH-44 பகுதியின் Km 151/837 என உறுதிப்படுத்தி, 6 வழிச்சாலை (6-Lane) DPR திட்டத்தின் கீழ் Vehicular Underpass (VUP) பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தது. இடைக்கால பாதுகாப்பு நடவடிக்கையாக, இந்த மேம்பாலம் Annual Safety Action Plan-இல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகளின் பலனாக, 17.12.2025 அன்று CPGRAMS மூலம் வந்த அதிகாரப்பூர்வ பதிலில், பாளையம்புதூர் சந்திப்பில் Vehicular Underpass (VUP) மற்றும் Service Road அமைப்பதற்கான செலவுத்திட்ட மதிப்பீடு ஒப்புதல் பெற்றுள்ளதாக NHAI அறிவித்துள்ளது. மேலும், டெண்டர் அழைப்பதற்கான ஆவணங்கள் (Bid Documents) தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளன, விரைவில் டெண்டர் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது
ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்த மனுக்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பின்னர், பாளையம்புதூர் சந்திப்பில் மேம்பாலம் திட்டம் தற்போது நடைமுறை அமலுக்கு மிக அருகில் வந்துள்ளது. இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டால்,
விபத்துகள் கணிசமாக குறையும்
போக்குவரத்து நெரிசல் தணியும்
பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக சாலை கடக்க முடியும்
என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.