தருமபுரி | டிசம்பர் 29 :
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில், புதிய பஸ்நிலையத்தில் உள்ள கடைகளின் குத்தகை உரிமம் நீட்டிப்பில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி கீழ் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர் சிலம்பரசன் முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் சின்னசாமி கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பேரூராட்சி நிர்வாகம் மூலம் கடை குத்தகை உரிமங்களை நீட்டிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படப்பட்டுள்ளதாகவும், இது சிறு வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், சர்ச்சைக்குரிய பேரூராட்சி தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்ட நிர்வாகி மனோன்மணி, பகுதிக்குழு உறுப்பினர்கள் ராஜாமணி, சின்ன ராஜி, லோகநாதன், கிளைச் செயலாளர்கள் ராஜசேகர், முருகன், பாதிப்பின், முனியப்பன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கடை குத்தகை உரிமம் நீட்டிப்பு தொடர்பான முடிவை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பாப்பாரப்பட்டி கீழ் பஸ் நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

.jpg)