தருமபுரி | டிசம்பர் 29:
தருமபுரி மாவட்டம், தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் அமலா மழலையர்–தொடக்கப்பள்ளி, பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு பேரூராட்சி ஊ.ஒ. உருது நடுநிலைப்பள்ளி மற்றும் செல்லியம்பட்டி ஆர்.சி. நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 சிறப்பு முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ரெ.சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 04.11.2025 முதல் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் கட்ட வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்து, 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 27.12.2025 (சனி), 28.12.2025 (ஞாயிறு), 03.01.2026 (சனி) மற்றும் 04.01.2026 (ஞாயிறு) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த முகாம்களில் புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் நீக்கம், வாக்காளர் விவரங்கள் திருத்தம், பாகம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக படிவம் 6, 6A, 6B, 7, 8 மற்றும் உறுதிமொழி படிவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அமைவிட அலுவலர்கள் பணியில் உள்ளனர்.
18 வயது நிறைவடைந்த தகுதியான நபர்கள் மற்றும் 01.01.2026க்குள் 18 வயது நிறைவடைய உள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் படிவம்–6 மற்றும் உறுதிமொழி படிவங்களை பூர்த்தி செய்து முகாம்களில் வழங்கி வாக்காளராக பதிவு செய்யலாம். பொதுமக்கள் தங்களின் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் சென்று இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், இணைய வழியாகவும் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தின் “New Voters Registration” பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை. தவறான தகவல் அளித்து வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் எச்சரித்தார்.
இந்த ஆய்வின் போது தருமபுரி வட்டாட்சியர் திரு. செளகத் அலி, பாலக்கோடு வட்டாட்சியர் திரு. அசோக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

.jpg)