நல்லம்பள்ளி, டிச.18:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட இண்டூர் ஏரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதி பவுண்டேஷன் நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகள் நடும் பணிகளையும், ஏரியின் கரைகளை பலப்படுத்தும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் மேம்பாடு தொடர்பாக தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தளவாய்அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில், இண்டூர் ஆதி பவுண்டேஷன் நிர்வாகத்தின் சார்பாக நட்டு வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மரக்கன்றுகள் வளர்ச்சியடைந்து நீண்டகால பயனை அளிக்கும் வகையில் பராமரிப்பு பணிகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகர்கூடல் ஊராட்சியில், பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் வால்கரை ஓடை முதல் நாகாவதி அணை வரை கால்வாய் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் தரமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. நீலமேகம், இண்டூர் ஆதி பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் திரு. ஆதிமூலம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
.gif)

.jpg)