தருமபுரி, டிச. 23:
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும், தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் கொண்ட வேலைநாடுநர்களும் கலந்து கொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26.12.2025 (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பங்கேற்கும் தனியார்துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான பணியாளர்களை நேரடியாகத் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது முழுமையாக இலவச முகாம் என்பதுடன், இதன் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் இருப்பதாக தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனால், மேற்படி பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து வேலைநாடுநர்களும், 26.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ரெ.சதீஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

.jpg)