தருமபுரி, டிச.16:
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.12.2025 (சனிக்கிழமை) அன்று சோகத்தூரில் உள்ள ஓடதொன் போஸ்கோ கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு உள்ளிட்ட அனைத்து கல்வித் தகுதியுள்ள வேலைநாடுநர்களும் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்பதற்கு எந்தவித கட்டணமும் இல்லை.
மேலும், இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தொழில் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு dpijobfair25@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 04342-288890 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
எனவே, காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

.jpg)