தருமபுரி | டிசம்பர் 27:
தருமபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் நீக்கம், வாக்காளர் விவரங்கள் திருத்தம், பாகம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் (Electoral Roll Observer) மற்றும் வணிகவரி–பதிவுத்துறை அரசு செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் முன்னிலையில் இன்று (27.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகள் கடந்த 04.11.2025 முதல் நடைபெற்று வருகின்றன. அதன் முதல்கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த முகாம்களில் புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் நீக்கம், வாக்காளர் விவரங்கள் திருத்தம், பாகம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக படிவம் 6, 6A, 6B, 7, 8 மற்றும் உறுதிமொழி படிவங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 01.01.2026க்குள் 18 வயது நிறைவடைய உள்ள தகுதியான நபர்கள், புதிய வாக்காளர் பதிவுக்கான படிவம்–6 மற்றும் உறுதிமொழி படிவத்தை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து இம்முகாம்களில் சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் இணைய வழியாகவும் https://voters.eci.gov.in/eredrm என்ற இணையதளத்தில் “New Voters Registration” பகுதியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை என்றும், தவறான தகவல் அளித்து வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, நகராட்சி ஆணையர் சேகர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். வாக்காளர் பட்டியல் செம்மையாக தயாரிக்க பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கேட்டுக்கொண்டார்.

.jpg)