Type Here to Get Search Results !

அமாணி மல்லாபுரத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை முகாம் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.


தருமபுரி | டிசம்பர் 27:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், அமாணி மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் இன்று (27.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.


இந்த முகாமில் 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 25 பழங்குடியினர் மக்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகள், 25 மாற்றுத்திறனாளி மருத்துவ பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் 100 நபர்களுக்கு கலைஞர் காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பொதுமக்களுக்கு உயர் தர மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்கில் இந்த “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம் நடத்தப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு வட்டாரத்திலும் மூன்று முகாம்கள் வீதம், மொத்தம் 30 உயர் மருத்துவ சேவை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, இம்முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.


இந்த மருத்துவ முகாமில் முழுமையான உடல் பரிசோதனைகளுடன், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகப்பேறு, குழந்தை நலம், இதயநலம், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், பல், கண், காது–மூக்கு–தொண்டை, மனநலம், இயன்முறை மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனை உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் நிபுணர் மருத்துவர்களால் வழங்கப்பட்டன.


முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆபா கார்ட் (ABHA Card) உருவாக்கப்பட்டதுடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் (CMCHIS) கீழ் பதிவு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, கண்புரை நோயாளிகள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள், இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை இலக்காக கொண்டு இம்முகாம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த நிகழ்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் இராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், வட்டாட்சியர் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிகணேசன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies