பாலக்கோடு, நவ. 06 -
பாலக்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களின் அருகே, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகச பயணத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
அண்மைக் காலமாக பல இளைஞர்கள் சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடுவது, புழு நெளிவதைப் போன்று வளைந்து வளைந்து ஓட்டுவது, நடுரோட்டில் வீலிங் செய்வது, மேலும் ஒரே வாகனத்தில் 3 முதல் 5 பேர் வரை பயணிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பல இடங்களில் இதுபோன்ற சாகசங்கள் காரணமாக விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இது சட்டத்திற்கும், போக்குவரத்து விதிகளுக்கும் எதிரானது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போலீசார் சில நேரங்களில் பெயரளவில் அபராதம் விதித்துவிட்டு, தொடர்ந்து இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுகொள்வதில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர். இதனால் சாலைகளில் தினசரி அபாய நிலை நீடிக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள்,
“மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து, இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,”எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)