பாப்பிரெட்டிப்பட்டி, அக். 10 -
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில், 2026-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. இதனையடுத்து, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில், கட்சியின் கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநிலத் துணைத் தலைவர் பா. ஜெபசிங் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளராகவும் சேவையாற்றி வரும் பா. ஜெபசிங், பாப்பிரெட்டிபட்டி தொகுதி முழுவதும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதிலும், சமூக மாற்றங்களை உருவாக்குவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தனது அனுபவம், ஊழல் ஒழிப்பு பணிகளில் ஈடுபாடு மற்றும் மக்கள் சேவை மனப்பான்மை ஆகியவற்றை முன்னிறுத்தி, “பாப்பிரெட்டிபட்டி மக்களுக்கு நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் சேவை செய்ய விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026 பிப்ரவரி மாதத்திற்குள் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர் அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.