Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.


பென்னாகரம், அக். 18, 2025 —

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், பருவதனஹள்ளி தி ஸ்பார்டன்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டைகள், 10 பழங்குடியினர் மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள், மேலும் 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, பொதுமக்களுக்கு உயர் தரமான மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்கில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் கடந்த 02.08.2025 அன்று தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2025 வரை மொத்தம் 30 உயர் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இன்றைய முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்து ஆட்சித்தலைவர் அவர்கள் நேரடியாக ஆய்வு செய்தார்.


“நலம் காக்கும் ஸ்டாலின்” முகாமின் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோதனைகளுடன் 17 சிறப்பு மருத்துவ பிரிவுகள் — பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தை நலம், இதயநோய், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், பல், கண், காது-மூக்கு-தொண்டை, மனநலம், இயற்கை மருத்துவம், உணவியல் ஆலோசனை உள்ளிட்ட — சிறப்பு நிபுணர்களால் இலவசமாக வழங்கப்பட்டன.


இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆபா கார்டு (ABHA CARD) உருவாக்கப்பட்டு, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் (CMCHIS) கீழ் பதிவு செய்யப்பட்டனர். மேலும், மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள், கண்புரை அறுவை சிகிச்சைக்கான பரிந்துரைகள் உள்ளிட்ட மருத்துவ நன்மைகள் வழங்கப்பட்டன.


இம்முகாமில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே. மணி, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. இராஜேந்திரன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் திரு. ஆ.க. அசோக்குமார், அரசுத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள், “அனைத்து பொதுமக்களும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies