தருமபுரி, அக். 13 -
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 513 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் சாலை, குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா வழங்குதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மனுக்கள் அளித்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் அவர்கள் கூட்டத்தில் பேசுகையில்,
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, இன்று பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, தகுதியானவர்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்,”என்று தெரிவித்தார்.
மேலும், இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட தன்னார்வ இரத்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. மனோகர், மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)