தருமபுரி, அக்.01 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சித்திரப்பட்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பெருமாளப்பன் திருக்கோயில் மிகப் பழமையானதும், பக்தர்கள் அதிகம் வருகை தரும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலின் புனரமைக்கப்பட்ட கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 6ஆம் தேதி மிக விமர்சையாக நடைபெற்றது. அந்த கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, 25ஆம் நாளான இன்று (01.10.2025) சித்திரப்பட்டி மந்திரி கவுண்டர், ஜடையன் சீனிவாசன், ஜடையன் கோவிந்தராஜ் குடும்பத்தினரின் தலைமையில் மண்டல பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களின் பங்கேற்புடன் மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

.jpg)