பாலக்கோடு, அக்.04 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சடையப்பநாதர் திருக்கோவிலில் இன்று சனி பிரதோஷ வழிப்பாடு பக்தி பரவசமாக நடைபெற்றது.
சனி பிரதோஷ நாளையொட்டி நந்தி பகவானுக்கு தேன், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் மூலவரான சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
வேதமந்திரங்கள் ஒலிக்க, சங்குகள் முழங்கிய நிலையில் பக்தர்கள் “ஹர ஹர மகாதேவா” என முழங்கினர். பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும் என ஐதீகம் கூறுகிறது.
பூஜை முடிவில் உற்சவமூர்த்திகள் ஆலயத்தை மூன்று முறை சுற்றி வந்தன. பெருமளவிலான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டு நந்தி பெருமானை வேண்டி அருள் பெற்றனர். வழிபாடு முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

