பென்னாகரம், செப்டம்பர் 27 | புரட்டாசி 11 :
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.42.30 லட்சம் மோசடி செய்த வழக்கில், சேலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய செந்தில்நாதன் (40) என்பவரை பென்னாகரம் போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பருவதனஅள்ளி திருவள்ளுவர் நகரை சேர்ந்த சீனிவாசன் (42) பழைய கார் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி ரேவதி உட்பட நால்வருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (42) மற்றும் ஓமலூர் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் ஆகியோர் வாக்குறுதி அளித்தனர்.
இதனை நம்பி, சீனிவாசன் கடந்த ஜனவரி மாதம் பல தவணைகளில் ரூ.42.30 லட்சம் கொடுத்தார். பின்னர் இசிஜி டெக்னீசியன், கலால் அலுவலகம், ரேஷன் கடை, வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய துறைகளுக்கான போலியான பணி நியமன ஆணைகளை ஈமெயில் மூலம் வழங்கியதும், விசாரணையில் அவை அனைத்தும் போலியானவை என தெரியவந்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சீனிவாசன் தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பென்னாகரம் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சந்தோஷ்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று செந்தில்நாதனும் கைது செய்யப்பட்டு தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார், இந்த மோசடி வழக்கில் மேலும் பலர் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.