தருமபுரி, செப். 08, 2025 (ஆவணி 21):
திருமணத்துக்கு பின் 2020ல் பிறந்த முதல் பெண் குழந்தை மூன்று மாதங்களிலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. பின்னர் 2022ல் பிறந்த இரண்டாவது பெண் குழந்தைக்கு காதணி விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், பரத் மற்றும் அவரது பெற்றோர் அடிக்கடி வரதட்சணை கோரி ஸ்ரீபிரியாவை துன்புறுத்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். தம்பதியருக்கு இடையிலான அடிக்கடி ஏற்பட்ட தகராறு, கடந்த 4ஆம் தேதி வாக்குவாதமாகி, பரத் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீபிரியா காணாமல் போனதாக பரத்தின் உறவினர்கள், ஸ்ரீபிரியாவின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். புகாரின் பேரில் அதியமான் கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சனிக்கிழமை தருமபுரி நகரம் அருகிலுள்ள ராமக்காள் ஏரியில் ஸ்ரீபிரியா உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். உடல் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீபிரியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டி, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். “வரதட்சணை கொடுமையால் அடித்து கொலை செய்து, உடலை ஏரியில் வீசியிருக்கலாம்” என சந்தேகம் தெரிவித்தனர். பரத் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாக கைது செய்யாவிட்டால் உடலை பெறமாட்டோம் என்றும் உறவினர்கள் எச்சரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். காதலித்து திருமணம் செய்த இளம் தம்பதிகளின் வாழ்க்கை, ஆறு ஆண்டுகளுக்குள் வரதட்சணை கொடுமை சந்தேகத்தில் மரணத்தில் முடிந்தது மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.