தருமபுரி, 25.09.2025 | புரட்டாசி 09 -
தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு, தமிழ்நாடு அரசு 2025–2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கான புனிதப் பயண மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் பெளத்தர்கள், நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000/- வரை ECS முறையில் நேரடியாக மானியம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தில் கலந்து கொள்ள விரும்பும் பெளத்தர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும், www.bcmbcmz.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 30.11.2025-க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005. இத்தகவலை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டுள்ளார்.