தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் "ஒட்டை திருடாதே" என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து பேரணி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி தலைவர் வெற்றிவேந்தன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தருமபுரி காந்தி சிலை அருகே இருந்து பேரணியைத் தொடங்கி, கடைவீதி மற்றும் 4-ரோடு வழியாக சென்று ரோட்டரி அரங்கத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர், பேரணியில் இருசக்கர வாகனத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு தலைக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைத்தலைவர் பி. தினேஷ் பங்கேற்று, “இளைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு காங்கிரசை வலுப்படுத்த வேண்டும். அதிக இளைஞர்களை காங்கிரசில் உறுப்பினராக இணைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தீர்த்தாராமன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயசங்கர், சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் முபாரக் பாஷா, நகர தலைவர் வேடி, மாவட்ட விவசாய பிரிவு தலைவர் மனி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல இளைஞரணி தொண்டர்கள் பங்கேற்றனர்.
- தருமபுரி செய்தியாளர் முருகேசன்.