தருமபுரி, செப்டம்பர் 24 | புரட்டாசி 08:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10,000 ஆக உயர்த்த வேண்டும், அது ஊராட்சி மூலமாக வழங்கப்பட வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 வழங்க வேண்டும், கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை காவலர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.5,00,000 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநில பொருளாளர் கே. மகேஷ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். திருவருட்செல்வன், மாவட்ட செயலாளர் கே. முருகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். நிர்வாகிகள் துரைவேல், இலட்சுமணன், அருள்மணி, மூர்த்தி, முத்து, குணசேகரன், கோவிந்தசாமி, முருகன், மோகன், இராமதாஸ், பவுன் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.