கம்பைநல்லூர், செப். 06 | ஆவணி 21 :
தருமபுரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மா மகத்துவ மையம் பணிகளை இன்று வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் திரு.வி.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை இயக்குநர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., முன்னிலையில் பார்வையிட்டனர். இதன் போது மாங்கன்றுகளை நடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண் உற்பத்தியை தொடர்ந்து பெருக்க மற்றும் விவசாய பெருங்குடி மக்களுக்கு தேவையான துறை சார்ந்த திட்டங்களை தரமான முறையில் வழங்க அறிவுறுத்தியுள்ளனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கடந்த 2022-23 ஆண்டில் தருமபுரியில் மா மகத்துவ மையம் அமைப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த மையம் அமைக்க, தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 25 ஏக்கர் நிலம் 13.02.2023 அன்று தோட்டக்கலை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்தோ-இஸ்ரேல் கூட்டமைப்பின் வாயிலாக மையத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றுள்ளது. நில மேம்பாட்டுப்பணிகள், புதர் அகற்றுதல், நிலம் சமன் செய்தல் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, இரண்டு ஆழ்துழைக்கிணறுகள் அமைத்து மின் இணைப்பும் பெற்றுள்ளது.
முக்கியமாக, 3 எக்டர் பரப்பளவிற்கு மா (பெங்களூரா, அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா மற்றும் இமாம்பசந்த் வகைகள்) நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (பெங்களூரு மற்றும் ஆந்திரா) வழங்கிய 30 இரகங்கள் மரபணுத்திடலில் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வட இந்தியா வகைகள் நடவு பணிகள் தொடர்கின்றன.
இந்த நிகழ்வில் சென்னை கண்காணிப்பு பொறியாளர் திரு.குமரன், தருமபுரி தோட்டக்கலை துணை இயக்குனர் திருமதி.அ.க.பாத்திமா, வேளாண் இணை இயக்குநர் (பொ) திருமதி.ரத்தினம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி.சித்ரா, வேளாண் துறை இயக்குநர் (மா.திட்டம்) திரு.இராஜகோபால், தருமபுரி செயற்பொறியாளர் (பொ) திரு.இராதாகிருஷ்ணன், வேளாண் துறை இயக்குநர் (விதை ஆய்வு) திரு.மணி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
.gif)

