தருமபுரி, செப்டம்பர் 23 | புரட்டாசி 07:
மக்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களின் உடல்நல பிரச்சனைகளை கவனித்து, சிகிச்சை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம், தருமபுரி மாவட்டத்தில் பெரிய அளவில் பயனளித்து வருகிறது.
கடந்த நான்காண்டுகளில், இந்தத் திட்டத்தின் மூலம் 4,22,535 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் என்று தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 05.08.2021 அன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தின் தும்பலஅள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் முதல்முறையாக இந்தத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என அனைத்துத் துறைகளிலும் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பயனாளியும் மக்கள் நலப் பதிவில் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள்.
📊 ஆண்டு வாரியாக பயனடைந்தோர் விவரம்:
-
2021–2022: 1,01,946 பேர்
-
2022–2023: 69,231 பேர்
-
2023–2024: 1,59,058 பேர்
-
2024–2025 (பிப்ரவரி 2025 வரை): 92,300 பேர்
இதன் மூலம் மொத்தம் 4,22,535 பேர் சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
மக்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களின் உடல்நலத் தேவைகளை பூர்த்தி செய்யும் இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டம், தருமபுரி மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக ஆட்சியர் சதீஸ் தெரிவித்தார்.