தருமபுரி, செப்டம்பர் 23 | புரட்டாசி 06:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், உணவு பொருட்கள் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள், பிளாஸ்டிக் தடை, தியேட்டர் கேன்டீன்கள், டீ கடைகள் மற்றும் சில்லி சிக்கன் கடைகளில் உணவு தரம் தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஒகேனக்கல் பகுதியில் பயன்படுத்திய எண்ணெய்களை சேகரித்து பயோடீசலாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
உணவகங்கள் மற்றும் கேன்டீன்களில் சுத்தம் பேணப்பட வேண்டும் எனவும், பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்களுக்கு கட்டாயம் லேபிள் ஒட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
மேலும், உணவு தொடர்பான புகார்கள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண், Tn Food Safety Consumer App, மற்றும் foodsafety.tn.gov.in இணையதளம் மூலம் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.